இன்று காலை 9.28 மணிக்கு விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி ராக்கெட்; 31 செயற்கைகோள்களை விண்ணில் நிலைநிறுத்த இஸ்ரோ திட்டம்….

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, பிஎஸ்எல்வி சி ராக்கெட் மூலம், தனது 100வது செயற்கைக் கோளை இன்று விண்ணில் செலுத்துகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் பிஎஸ்எல்வி சி 39 ராக்கெட் சுமந்து சென்ற செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தும் முயற்சி, வெப்பத்தகடு பிரியாததால், தோல்வியில் முடிந்தது. நான்கு மாத இடைவெளிக்குப் பின்னர், இஸ்ரோ தற்போது, பிஎஸ்எல்வி சி 40 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இதன்மூலம், தனது 100வது செயற்கை கோளை, சுற்றுவட்டப்பாதையில் இஸ்ரோ நிலைநிறுத்த உள்ளது. இதற்கான 28 மணி நேர கவுன்டவுன் நேற்று அதிகாலை 5.29 மணிக்கு தொடங்கியது. இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ள பிஎஸ்எல்வி சி 40 ராக்கெட்டைச் செலுத்தி, அது எடுத்துச் செல்லும் செயற்கைகோள்களை சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்த ஏதுவாக, சுமார் 2 மணிநேர கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. 4 எரிபொருள் நிலைகளைக் கொண்ட இந்த பிஎஸ்எல்வி சி 40 ராக்கெட்டை ஏவ, ஏறத்தாழ இரண்டு முறை அதன் இயக்கத்தை நிறுத்திவைத்து மீண்டும் விண்ணில் செலுத்தும் நடைமுறை பின்பற்றப்பட உள்ளது. குறைந்த புவி ஈர்ப்புவிசை மற்றும் மிக குளிர்ந்த தட்பவெப்ப சூழலில் ராக்கெட்டை நிறுத்தி இயக்குவது, மீண்டும் இயக்கும் போது உருவாகும் அதிக அளவு வெப்பத்தில் இருந்து ராக்கெட்டை பாதுகாப்பது, ராக்கெட்டை குளிர் நிலைக்கு திரும்ப வைத்தல் ஆகிய சவால்கள் பிஎஸ்எல்வி சி 40 ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் முயற்சியில் அடங்கி உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பிஎஸ்எல்வி-சி 40 ராக்கெட் 31 செயற்கைகோள்களுடன் இன்று காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த செயற்கை கோள்கள் பூமியை படம் எடுத்து அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *