தெலங்கானா ராஷ்டிர சமிதிக் கட்சி சட்டமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சந்திரசேகர ராவ் நாளை இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.
தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 119தொகுதிகளில் சந்திரசேகரராவின் தெலங்கானா ராஷ்டிர சமிதிக் கட்சி 88இடங்களில் வென்றது. இதையடுத்து ஐதராபாத்தில் தெலங்கானா ராஷ்டிர சமிதிக் கட்சியின் தலைமையகத்தில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது.
இதில் சட்டமன்றக் கட்சித் தலைவராகச் சந்திரசேகரராவ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாளை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் சந்திரசேகர ராவ் இரண்டாவது முறையாகத் தெலங்கானா முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார். அவருக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் ஆளுநர் நரசிம்மன் பதவியேற்பு உறுதிமொழி செய்து வைக்க உள்ளார்.

