எல்லைக்கு அப்பால் இருந்து, இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் அத்துமீறித் தாக்குதல் நடத்திய நிலையில், ஜம்மு-காஷ்மீரில் 4 தீவிரவாதிகளை, ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படையினர், ஜம்மு-காஷ்மீரில் இந்திய நிலைகளை குறிவைத்து, சிறிய ரக மோட்டார் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இந்த குண்டுகள் பூஞ்ச் பகுதியில் உள்ள ராணுவ அதிகாரிகளின் அலுவலகம் அருகே விழுந்தன. இதையடுத்து, இந்திய வீரர்களும் பாகிஸ்தான் படைக்கு பதிலடி கொடுத்தனர்.
இதனிடையே, சோபியான் மாவட்டத்தின் நாடிகாம் ((Nadigam)) கிராமப் பகுதியில் சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டம் இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வீடு ஒன்றில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து, மேலும் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

