இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்திருப்பது ஜனநாயக படுகொலை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியல் நிலவரம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்றில் இருபங்கு எம்.பி.க்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, தேர்தல் நடைபெற்ற நான்கரை ஆண்டுகளுக்குள் இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என்று கூறியுள்ளார்.

ஆனால், இலங்கை அரசியல் சட்டத்தினை காலில் போட்டு மிதித்து, சிறிதும் மனசாட்சியின்றி நாடாளுமன்றத்தை கலைத்துள்ள சிறிசேனாவின் அராஜகம் பேரதிர்ச்சியளிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வாழும் தமிழர்களின் நலனுக்கும், பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தையும், அச்சுறுத்தலையும் சிறிசேனா ஏற்படுத்தியிருப்பதாகவும், புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என தெரிந்ததும், நாடாளுமன்றத்தை கலைத்திருப்பது ஜனநாயக படுகொலை என்றும் அவர் சாடியுள்ளார்.

இதை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள மு.க.ஸ்டாலின், இந்திய அரசின் மவுனத்தால், உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருப்பதாகவும் கூறியுள்ளார்.

எனவே, இலங்கையில் உருவாகியுள்ள அரசியல் நெருக்கடியில், ஈழத்தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் பொறுப்பும், கடமையும் இந்திய அரசுக்கு இருப்பதாகவும், ஜனநாயக படுகொலைக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இலங்கையில் தமிழர்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *