ஏசி அறைகளுக்குள் அமர்ந்து கொண்டு, அரசுக்கு எதிரான வெறுப்பு அரசியலை, நகர்புற நக்சல்கள் பரப்பி வருவதாக, பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியிருக்கிறார். சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜக்தால்பூரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வாக்குவங்கி அரசியலுக்காக, மாவோயிஸ்டுகளுக்கு பாதுகாப்பு அளித்து, காங்கிரஸ் அவர்களை பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.
தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளில் படிக்க வைப்பதோடு, பெரிய பெரிய கார்களில் நகர்புற நக்சல்கள் வலம் வருவதாக பிரதமர் தெரிவித்தார்.. சொகுசு வாழ்க்கை வாழும் நகர்புற நக்சல்கள், ஆதிவாசி இளைஞர்களை மூளைச்சலவை செய்து, அவர்களின் வாழ்க்கையை அழித்துக் கொண்டிருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
மாவோயிஸ்டுகளை ஒரு கையால் மறைத்துவைத்து பாதுகாத்து கொண்டு, மறுபுறத்தில், சத்தீஸ்கர் மாநிலத்தை மாவோயிஸ்டுகளை பிடியிலிருந்து விடுவிக்கப் போவதாக கூறி, காங்கிரஸ் ஏமாற்றுவதாக பிரதமர் தெரிவித்தார்.
தூர்தர்ஷன் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் அச்சுயானந்த் சாஹூ, பாதுகாப்புப்படை வீரர்கள் ஆகியோர் மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாகவும், ஆனால், இப்படிப்பட்ட கொடூர மாவோயிஸ்டுகளை, காங்கிரஸ் கட்சி போராளிகள் எனக் கூறுவதை எப்படி பொருள் கொள்வது எனத் தெரியவில்லை என பிரதமர் மோடி தெரிவித்தார்.

