சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 17 பேருக்கு நவம்பர் 13 வரை நீதிமன்ற காவல் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் கைதான 17 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த காத்து கேளாத 12 வயது சிறுமியை அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்நிலையில், அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை, அருகில் உள்ள மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர்.
மேலும் சிறுமி மன ரீதியிலும் பாதிப்படைந்திருந்தார். இதைத் தொடர்ந்து அவர், சிலர் தன்னிடம் பாலியல் ரீதியிலான தொந்தரவில் ஈடுபட்டதாக அழுது கொண்டே பெற்றோரிடம் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஜூலை 15-ம் தேதி புகார் தெரிவித்தனர். காவல்துறை விசாரணையில், சிறுமி வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்து வந்த காவலாளி, லிப்ட் ஆபரேட்டர், பிளம்பர் என அடுத்தடுத்து 17 பேர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் 17 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்குமாறு சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். பின்னர்
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை வந்த நிலையில் கைது செய்யப்பட்ட 17 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

