புதுச்சேரி போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இம்மாத இறுதியில் 3 மாத ஊதியம் வழங்கப்படும் என பிஆர்டிசி தெரிவித்துள்ளது.
புதுச்சேரி சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் 2 மாத நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, கடந்த 25ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சென்னை, பெங்களூரு உள்பட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பயணிகள் பேருந்து கிடைக்காமல் நீண்டநேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 2 மாத ஊதியம், இந்த மாத சம்பளத்துடன் வழங்கப்படும் என்பதால், தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு, உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மீறினால், நிரந்தர தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

