சென்னை வேளச்சேரியில் பிறந்து ஒரு மாதமே ஆன நிலையில் மாயமான பச்சிளம் குழந்தை ஏரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. குழந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாயை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வேளச்சேரி ஏரிக்கரை அருகில் குடியிருப்பு ஒன்றின் தரைத்தளத்தில் வசிக்கும் வெங்கண்ணா – உமா தம்பதியினருக்கு கடந்த மாதம் ஆண்குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் காற்றுக்காக கதவைத் திறந்துவைத்து தூங்கியதாகவும், அதிகாலை 5 மணியளவில் குழந்தை மாயமானதாக வெங்கண்ணா வேளச்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து குழந்தை மாயமானதாக வழக்குப் பதிந்த போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் அதிகாலையில் ரோந்து சென்ற போலீசார், பெண் ஒருவர் குழந்தையை தூக்கிச் செல்வதை பார்த்ததாகத் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, உமா தான் குழந்தையை ஏரிப்பகுதிக்கு எடுத்துச் சென்றது தெரியவந்தது.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, குழந்தை பால்குடிக்கும் போது தனக்கு மார்பகத்தில் வலி ஏற்பட்டதாகவும், இதுகுறித்து பலமுறை வெங்கண்ணாவிடம் கூறியும் அவர் கண்டுகொள்ளாததல் குழந்தையைக் கொலை செய்து ஏரியில் உடலை வீசியதையும் ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து தாய் உமாவை போலீசார் கைது செய்தனர்.

