திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பழைய பாலத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் இயந்திரம் ஆற்றுக்குள் விழுந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. பொன்னேரி அடுத்த புதுவாயல் பகுதியில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆரணி ஆற்றில் பாலம் கட்டப்பட்டது.
தற்போது அதனருகில் புதிய பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் விரிவாக்கப் பணிகளுக்காக பழைய பாலத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று மாலை தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், ஹிட்டாச்சி பொக்லைன் இயந்திரத்தின் மூலம் பாலத்தை இடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராவிதமாக பாலம் இடிந்து, ஹிட்டாச்சி இயந்திரம் அப்படியே தலைகுப்புற ஆற்றுக்குள் விழுந்தது.இதனால் அங்கு கூடியிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், இயந்திரத்தை இயக்கிய மோசஸ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

