சத்திஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், சத்திஷ்கர் மாநிலத்தில் நவம்பர் 12 மற்றும் நவம்பர் 20 என இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார். மத்தியப் பிரதேசம், மிசோரம் மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 28 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று ராவத் அறிவித்தார்.
இதற்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 9 ஆம் தேதியுடன் முடிவடைவதாகவும், வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கு நவம்பர் 28ஆம் தேதி கடைசி நாள் என்றும் அவர் தெரிவித்தார். ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களில் டிசம்பர் 7ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அவர் கூறினார்.
இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய நவம்பர் 19 ஆம் தேதி கடைசி நாள் என்றார். 5 மாநிலங்களில் நடைபெறும் தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 11 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று ஓ.பி.ராவத் தெரிவித்தார். கர்நாடகாவில் 3 தொகுதிகளுக்கு நவம்பர் 3 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் ராவத் தெரிவித்தார்.

