அமெரிக்காவின் மிரட்டலையும் மீறி இன்று எஸ் 400 ரக ஏவுகணை குறித்து இந்தியா -ரஷ்யா ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில் அதனைப் புறக்கணித்து, ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகளை வாங்க இந்தியா முடிவு செய்து, அதற்கான ஒப்பந்தத்தில் ரஷ்ய அதிபர் புதினும், பிரதமர் மோடியும் இன்று கையெழுத்திட்டுள்ளனர்.
தரையிலிருந்து பாய்ந்து சென்று, எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் திறன் கொண்ட எஸ்-400 ரக ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. சுமார் ரூ.37 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் தற்போது கையெழுத்தாகியுள்ளது.
இதையடுத்து, நடைபெறவுள்ள இந்தியா-ரஷ்யா இடையிலான 19-வது வருடாந்திர உச்சி மாநாட்டில் புதினும், பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்க உள்ளனர். இருதரப்பு வர்த்தக உறவை பலப்படுத்துவது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும். குறிப்பாக அமெரிக்காவின் பொருளாதாரத் தடை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது.

