வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் செல்போனில் பேசிக் கொண்டே டிரைவர் ஓட்டி வந்த கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
4 பேர் பலத்த காயமடைந்தனர். அரக்கோணம் சுவால்பேட்டை எனுமிடத்தில், மேட்டுத் தெரு முனையில் ஜானி என்பவர் நடத்தி வரும் டீக்கடைக்குள் கார் ஒன்று திடீரென புகுந்தது. இதில், கடை அருகே நின்றிருந்த அரக்கோணம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த, ராணி என்ற பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இதேபோல டீக்கடை அருகே நின்று கொண்டிருந்த 4 பேர் பலத்த காயமடைந்து அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த சீனிவாசலு, குடும்பத்தினருடன் மஹிந்திரா டியுவி 500 காரில், திருத்தணி நோக்கி சென்றபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
சம்பவம் நடைபெற்ற பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில், செல்பேசியில் பேசிக்கொண்டே சீனிவாசலு காரை கவனக்குறைவாக ஓட்டியதால் மின்கம்பத்தை உரசியபடி சென்று பின்னர் டீக்கடையில் மோதியுள்ளது. காரை ஓட்டி வந்த சீனிவாசலுவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

