குருபெயர்ச்சியை ஒட்டி சிவாலயங்களில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு இன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
நவக்கிரங்களில் சுபக் கிரகமான குருபகவான் புத்திர காரகனாகவும் தன காரகனாகவும் விளங்குகிறார். வாழ்வில் வளமும் நலமும் பெற குருபகவானின் அருள்பார்வை அவசியம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
குரு பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு செல்ல ஒருவருடம் ஆகிறது. ஒருவருடைய ராசியில் குரு உச்சம் பெற்றாலும் ஆட்சி பெற்றாலும் அந்த ஜாதகத்திற்கு உரியவருக்கு தர்ம சிந்தினைகள் ஏற்படும் என்ற சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில், துலா ராசியில் இருக்கும் குரு பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று இரவு 10.05 மணி முதல் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார்.திருக்கணித பஞ்சாங்கப்படி இம்மாதம் 11 ம்தேதி குருபெயர்ச்சி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து சிவாலயங்கள், குரு பரிகாரத் தலங்களில் யாகங்களும் பரிகாரப் பூஜைகளும் நடைபெறுகின்றன.
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள குருபகவான் கோவிலில் இன்று குருபெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு செல்வோருக்கு பேருந்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

