16 தமிழக மீனவர்களை விடுவித்தது இலங்கை அரசு..

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேரை அந்நாட்டு அரசு விடுதலை செய்துள்ளது.

கச்சத்தீவு அருகே கடந்த 5ம் தேதி மீன்பிடித்து கொண்டிருந்த 12 மீனவர்களையும், இதேபோல கடந்த 7ம் தேதி 4 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்தது. கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மீனவர்கள் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

 இதையடுத்து 16 மீனவர்களையும் இலங்கை அரசு விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் ராமநாதபுரம் அழைத்து வந்தனர். அவர்களை தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் வரவேற்று அவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மீனவர் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்க வேண்டும்.

மேலும் அதற்கேற்ப குந்துகால் பகுதியில் 70 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக ஆழ்கடல் மீன்பிடி இறங்குதளம் அமைக்கவும் மூக்கையூர் பகுதியில் சுமார் 113 கோடி மதிப்பில் புதிய துறைமுகம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இந்நிலையில் இலங்கையில் உள்ள 174 படகுகளை விடுவிக்க அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் முதல் கட்டமாக ஊர்க்காவல்துறை  நீதிமன்றத்தால் 38 படகுகளும், மன்னார் நீதிமன்றம் 12 படகுகளையும் விடுவித்துள்ளன. தொடர்ந்து நாளை பருத்தித்துறை நீதிமன்றத்தில் இருந்து 27 படகுகள் விடுவிக்கப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *