லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக, கொடைக்கானல் காய்கறிச் சந்தையில், அதிக விலைக்கு, காய்கறிகள் விற்பனையாகின. மலைகளின் இளவரசியான கொடைக்கானலில், ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறும்.
இவ்வாறு நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில், மலைப்பகுதிகளில் விளைக்கூடிய காய்கறிகள் நீங்கலாக, மற்ற இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காய்கறிகளின் விலை, கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. பீன்ஸ் ஒரு கிலோ நூறு ரூபாய்க்கும், வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் என விலை உயர்வுடன் விற்பனையாகின.
இதுதொடர்பாக பேசிய சந்தை வியாபாரிகள், லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக, பிற பகுதிகளிலிருந்து, காய்கறிகளை எடுத்துவர ஆகும் வாகனச் செலவால், காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதாகத் தெரிவித்தனர்.

