தண்ணீர் தராமல் தண்ணி காட்டுவது தான் பா.ஜனதாவின் கொள்கை..! டி.ராஜேந்தர்

லட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் டி.ராஜேந்தர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்தி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும்படி தி.மு.க. சார்பில் எனக்கு அழைப்பு வந்தது.

தாய் கழகம் விடுத்த அழைப்பை ஏற்று இந்த போராட்டத்தில் நாங்களும் பங்கேற்கிறோம். இது மக்கள் போராட்டம். எனவே நான் கலந்து கொள்கிறேன்.

தமிழகத்துக்கு தண்ணீர் தராமல் தண்ணி காட்டுவது தான் பா.ஜனதாவின் கொள்கையா? கர்நாடகாவில் ஓட்டு வாங்குவதற்காக தமிழர்களுக்கு பா.ஜனதா வேட்டு வைக்கிறது. தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் சாக்குப் போக்கு சொல்கிறார்.

தமிழ்நாட்டில் நடக்கும் போராட்டத்தில் காங்கிரசும் கலந்து கொள்கிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ராகுல் காந்தியிடம் பேச வேண்டும். கர்நாடக அரசை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சம்மதிக்க வைக்க வேண்டும். அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தமிழக மக்களின் பொது பிரச்சினை. இதற்காக அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். போராட வேண்டும். அ.தி.மு.க. நேற்று தனியாக உண்ணாவிரதம் இருந்தது. நாளை தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் சென்று தனித்தனியாக போராட்டம் நடக்கிறது.

இது நமது பொது பிரச்சினை. எனவே, அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். இது போல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினைக்கு அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். இதுவும் பொது பிரச்சினை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *