பொங்கல் பண்டிகையையொட்டி அரசு பேருந்துகளில் சென்னையில் இருந்து 4 புள்ளி 40 லட்சம் பேர் சொந்த ஊர் சென்றுள்ளனர். இவர்கள் சென்னை திரும்ப நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். சென்னை உள்பட பல மாவட்டங்களில் 2 நாள் முன்னதாகவே பொங்கல் கொண்டாட்டம் களைகட்டியது. பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் 2 நாளுக்கு முன்பே பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் கொண்டாடினர். அதேபோல், தனியார் மற்றும் அரசு நிறுவனங்களிலும் ஊழியர்கள் பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.
பொங்கலை சொந்த ஊரில் கொண்டாட, சென்னையில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் கடந்த வியாழன் கிழமை முதல் பஸ், ரயில்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். தமிழக அரசு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு கடந்த 11, 12 மற்றும் 13ம் தேதிகளில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடம் கூடுதலாக 3 ஆயிரத்து 196 பேருந்துகளையும் சேர்த்து மொத்தம் 8 ஆயிரத்து 723 சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்பட்டன.
அதேபோல், பிற முக்கிய ஊர்களில் இருந்தும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகை முடிந்து மீண்டும் சென்னை திரும்புபவர்களின் வசதிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வழக்கமான 2 ஆயிரத்து 275 பேருந்துகளுடன் சேர்த்து 792 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதேபோல், இன்று 3 ஆயிரத்து 823 சிறப்பு பேருந்துகளும், நாளை 3 ஆயிரத்து 705 சிறப்பு பேருந்துகளும் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படுகின்றன.

