அரசியல் கட்சிகளுக்கான நன்கொடைகளை முறைப்படுத்த வழிவகுக்கும், தேர்தல் பத்திரங்களுக்கான வரையறைகளை மத்திய அரசு இறுதி செய்து அறிவித்திருக்கிறது.
அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகளை வரன் முறைப்படுத்தும் வகையில், கடந்தாண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில், மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, Electrol Bonds எனப்படும் தேர்தல் பத்திரங்கள் முறை கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில், இதுதொடர்பான கேள்வி ஒன்றிற்கு, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, மக்களவையில், எழுத்துப்பூர்வமான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க வகை செய்யும் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வரையறைகளை மத்திய அரசு இறுதி செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள குறிப்பிட்ட SBI வங்கி கிளைகளில் மட்டும் இந்த தேர்தல் பத்திரங்கள் கிடைக்கும் என்றும், இந்த தேர்தல் பத்திர முறை மூலம், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே நன்கொடை வழங்க இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

