ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கேரளா, லட்சத்தீவு மாநிலங்களுக்கு 325 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கேரளா, லட்சத்தீவில் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மீனவ மற்றும் விவசாய பிரதிநிதிகளை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது மாநில அரசுகள் சார்பில் பிரதமரிடம், நிவாரண நிதி தொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புயலால் முற்றிலும் சேதமடைந்த சுமார் ஆயிரத்து 400 வீடுகள் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சீரமைத்துத்தரப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கேரளா, லட்சத்தீவுகளுக்கு 325 கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

