முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான முதற்கட்ட விசாரணை இன்று தொடங்குகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனி நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் சரவணன் உள்பட 8 பேர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இதுவரை 70க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று மருத்துவர் சரவணனிடம் விசாரணை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த மற்றவர்களும் விரைவில் விசாரிக்கப்படுவார்கள் என்று விசாரணை ஆணையம் கூறியுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ள ஆறுமுகசாமி, சிறப்பு அதிகாரம் கோரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் சிறையில் உள்ள சசிகலாவை விசாரிக்க வேண்டி உள்ளதால், தேவையானவர்களிடம் விசாரணை நடத்த சிறப்பு அதிகாரம் வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

