இந்தியாவின் சூரிய சக்தி மின் பூங்கா திட்டத்திற்கு 100 மில்லியன் டாலர் கடனுதவி வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் உலக வங்கி கையெழுத்திட்டுள்ளது.
இந்தியாவில் மாற்று மின்சக்தி குறித்து மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. நாட்டின் பல்வேறு இடங்களில் சூரிய சக்தி மின் பூங்காக்கள் மிகப்பெரியளவில் அமைப்பதற்கான உள்கட்டமைப்புப் பகிர்வுத் திட்டங்களை நிறைவேற்றுவது குறித்தும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக உலக வங்கியிடம் இந்திய அரசு கடன் கோரியிருந்தது. இந்நிலையில் இத்திட்டத்துக்காக 100 மில்லியன் டாலர் கடன் வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் உலக வங்கி கையெழுத்திட்டுள்ளது. இது இந்திய மதிப்பில், 650 கோடியே 99 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாகும். இந்தத் தகவலை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடன் பெறுவதற்கான மூடி’ஸ் தரவரிசையில் இந்தியா ஒரு படி முன்னேறியுள்ள நிலையில் உலக வங்கி கடனுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

