சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், கனமழையால் ஏற்படும் அசம்பாவித்ததை தடுக்கவே மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும், மின்சாரத்தை கையாளும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். வானிலை மைய அறிக்கை மற்றும் ஊடக செய்திகளை மட்டுமே நம்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் உதயகுமார், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார். மேலும், பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறைக்கு மக்களிடம் இருந்து 122 அழைப்புகள் வந்துள்ளதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
இந்நிலையில், சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மேலும், சென்னையில் பருவமழை பாதிப்பு தொடர்பாக புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1913, 044-25367823, 044-25384965, 044-25383694 ஆகிய எண்ணுக்கு தொடர்பு கொண்டு, புகாரை தெரிவிக்கலாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

