தமிழகம், புதுச்சேரியில் இன்னும் இரண்டு நாட்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்க சாதகமான சூழல் உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதியிலும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவிவருவதாகத் தெரிவித்தார். இதனால் தமிழகம், புதுச்சேரியில் இன்னும் இரண்டு நாட்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் எனத் தெரிவித்தார்.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் இலேசான மழை தொடங்கியுள்ளதாகவும், படிப்படியாக உள் மாவட்டங்களிலும் மழை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார். சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இன்று காலை எட்டரை மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம், தரமணி, மாமல்லபுரம், சென்னை நுங்கம்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் ஆகிய இடங்களில் ஒரு சென்டி மீட்டர் மழை பதிவாகிள்ளது.

