கரூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதற்கு காவல் துறையினரே காரணம் என்று எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாநில தொகுதி பொறுப்பாளர்கள், தொகுதி துணை நிர்வாகிகள், மகளிரணியினர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் திரளாக பங்கேற்றனர்.
இதில் எழுச்சி தமிழர் தொல். திருமாவளவன் சிறப்புரை ஆற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாஜக தலைவர்களான தமிழிசை சவுந்தர்ராஜனும், ஹெச்.ராஜாவும் நாகரீகமற்ற முறையில் பேசி வருவதாக குற்றம்சாட்டினார். மேலும் கரூரில் பாஜக தொண்டர்களுடன் காவல்துறையினரும் சேர்ந்து கொண்டு விசிகவினர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர் கருப்பு பணத்தை மீட்டு மக்களுக்கு வழங்குவதாக தெரிவித்த பிரதமர் மோடி, அவர்களை ஏழ்மைக்கு தள்ளிவிட்டார் என்றும் ஜி.எஸ்.டி வரி விதிப்பின் மூலம் பன்னாட்டு கார்பரேட்டுகளுக்கு ஆதரவானது மத்திய அரசு என்பது அம்பலமாகியிருப்பதாகவும் தெரிவித்தார்.

