தன்மீதும் தன் குடும்பத்தினர் மீதும் பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறும் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்குத் தொடுக்கப்போவதாக மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் மகன் பெயர் பனாமா ஆவணங்களில் இடம்பெற்றிருந்தும் அவர் மீது இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்தார். அதேநேரத்தில் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அந்நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் செரீப்பை நீக்கியதைக் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்துள்ள சிவராஜ் சவுகான், ராகுல்காந்தி தன்மீதும் தன் குடும்பத்தினர் மீதும் பொய்யான குற்றச்சாட்டைக் கூறுவதாகத் தெரிவித்தார். இதற்காக ராகுல்காந்தி மீது அவதூறு வழக்குத் தொடுக்கப் போவதாகவும் சிவராஜ் சிங் சவுகான் குறிப்பிட்டார்.

