டெல்லியில், மொபைல் பழுதுநீக்கக் கொடுத்தபோது பேடிஎம் கணக்கு மூலம் 91 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டதாக புகாரளித்தும், அந்நிறுவனம் கணக்கை முடக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டெல்லி கல்கஜி பகுதியைச் சேர்ந்த 28 வயதான யூசுஃப் கரிம், தமது ஸ்மார்ட்போனை சர்வீஸ் செய்வதற்காக கடையில் கொடுத்துள்ளார். ஆனால், அதில் உள்ள பணப்பரிமாற்ற செயலியான பே.டி.எம்.ஐ டெலிட் செய்யாமலும், ஈ மெயிலை லாக் அவுட் செய்யாமலும் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சர்வீஸ் முடித்து போனை வாங்கிய போது, தமது கணக்கில் இருந்து 4 தவணையில் 91 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
வேறு யாரோ கணக்கில் மோசடி செய்து பணம் எடுத்ததை பேடிஎம்-ஏ தெரிவித்திருந்தபோதும், பயனாளரும் பலமுறை புகாரளித்தும் அந்த கணக்கை முடக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சர்வீஸ் சென்டர் பொறியாளர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

