ட்விட்டரில் உள்ள சந்தேகத்திற்கு இடமான கணக்குகளை அடையாளம் காண தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை வழங்குமாறு மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்தை கேட்டுக்கொண்டுள்ளது. போலியான ட்விட்டர் கணக்குகள் மூலம் வன்முறைகளை தூண்டுவது உள்ளிட்ட நோக்கில் பதிவுகள் இடப்படுவதைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுபோன்ற ட்விட்டர் கணக்குகளை அடையாளம் காண அவர்கள் குறித்த முழு தகவல்களையும் அளிக்க வேண்டும் என மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்திடம் கேட்டுள்ளது. குறிப்பிட்ட பதிவுகளை நீக்க வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்கவில்லை எனில் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவும் போலி செய்திகளை தடுக்கும் நோக்கில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து, ட்விட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜாக் டொர்சி ட்விட்டரில் எடிட் பட்டன் வழங்குவது குறித்த தகவலை சமீபத்தில் வழங்கி இருக்கிறார். டெல்லி ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற விழாவில் பேசிய ஜாக் டொர்சி ட்விட்களை எடிட் செய்யும் வசதியை வழங்குவது குறித்து பரிசீலினை செய்யப்படுவதாக தெரிவித்தார். இந்த அம்சம் விரைவில் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

