தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அது எந்த 2 மணி நேரம் என்பதை தமிழக அரசு முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்கக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக டெல்லியை தொடர்ந்து நாடு முழுவதும் பட்டாசுக்கு தடைக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் “தீபாவளி மற்றும் பண்டிகைகளின் போது இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம். புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது இரவு 11.55 மணி முதல் அதிகாலை 12.30 மணி வரை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பட்டாசுகளை வெடித்து கொண்டாடலாம்’’ என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில், பட்டாசு வெடிப்பது தொடர்பான தீர்ப்பை மறு ஆய்வு செய்து கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்துள்ளது. காலையில் ஓன்றரை மணிநேரம், மாலையில் ஒன்றரை மணிநேரம் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

