நிர்மலா தேவி வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சி : முக்கிய பிரமுகர்களை காப்பாற்ற முயற்சி என குற்றச்சாட்டு

நிர்மலா தேவி வழக்கில் உண்மை குற்றவாளிகளை காப்பாற்ற தீவிர முயற்சிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாணவிகளிடம் பாலியல் பேரம் நடத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா தேவி அளித்த வாக்குமூலமே குற்றச்சாட்டுக்கு காரணம். உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோருக்காக தான் மாணவிகளை அழைத்ததாக நிர்மலா தேவி வாக்குமூலம் அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது நிர்மலா தேவியை மிரட்டி பெறப்பட்ட வாக்குமூலம் என்று கூறியுள்ள முருகன் மனைவி சுஜா குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லாத போதும் 200 நாட்களாக தனது கணவரை சிறையில் அடைத்து வைத்திருப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நிர்மலா தேவி வாக்குமூலத்தின் பின்னணியில் முக்கிய பிரமுகர்களை காப்பாற்றும் முயற்சி இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. எனவே பாலியல் பேர விவகாரத்தில் உண்மைகள் வெளிவர வேண்டுமானால் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட வேண்டும் என்று குற்றசாட்டுக்கு ஆளானோர் தரப்பு கோரிக்கை வைத்துள்ளது.

பாலியல் பேர வழக்கில் சிறையில் உள்ள நிர்மலா தேவி உள்ளிட்ட 3 பேரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனையடுத்து சாட்சியங்களை ரகசியமாக விசாரிக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. ஓரிரு நாட்களில் 31 முக்கிய சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்றும், இந்த விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *