தீண்டாமையை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் 258ஆவது பிறந்தநாள் விழா, தியாகராஜ சுவாமிகளின் 250ஆவது பிறந்தநாள் விழா, அகில இந்திய தெலுங்கு அமைப்பின் சார்பில், சென்னை நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் இவ்விழாவில் பேசிய துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா நாயுடு, சுதந்திர போராட்டத்திற்கு பாடுபட்ட வ.உ.சி, பாரதியார் உள்ளிட்டவர்களை மறக்க கூடாது என்று தெரிவித்தார். மேலும் பெற்ற தாயாரையும், பிறந்த மண்ணையும், தாய்மொழியையும் எப்போது மறக்க கூடாது என்று கூறிய அவர், தீண்டாமையை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆந்திராவில் தமிழ் பள்ளிகள் இருக்கும்போது தமிழகத்தில் தெலுங்குப் பள்ளிகள் தொடங்குவதில் தவறேதும் இல்லை என்று தெரிவித்தார். தெலுங்குப் பள்ளிகள் தொடங்க முதல்வருடன் கலந்து ஆலோசிப்பேன் என்றும் அவர் கூறினார்.

