திருவண்ணாமலை மாவட்டத்தில் ஓடும் தென் பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட சாத்தனூர் அணை மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சாத்தனூர் அணையின் நீர்மட்ட உயரம் 119 அடி. அணையின் மொத்த நீர் கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடி. இந்நிலையில், சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சாத்தனூர் அணையில் இருந்து பிப்ரவரி 7-ந் தேதி முதல் மே 8-ந் தேதி வரை 750 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் எனவும், இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தில் இருந்து பிப்ரவரி 4-ம் தேதி முதல் மே 4-ம் தேதி வரை, சுழற்சி முறையில் தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

