பாசனத்துக்காக சண்முகா நதி மற்றும் அமராவதி அணைகளை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேனி மாவட்டம், சண்முகாநதி நீர்த்தேக்கத்தின் கீழ் உள்ள உத்தமபாளையம் வட்டத்தை சார்ந்த புன்செய் நிலங்கள் பயன்பெறும் வகையில் சண்முகா நதி நீர்த்தேக்கத் திலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதை ஏற்று, தேனி மாவட்டம், சண்முகாநதி நீர்த்தேக்கத்திலிருந்து வரும் 3ம்தேதி முதல் 94 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டு இருப்பதாக கூறியுள்ளார். இதே போன்று திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி, அமராவதி பழைய மற்றும் புதிய பாசனப்பகுதிகளைச் சார்ந்த நீரினைப் பயன்படுத்தும் வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளதாகவும் அதனை ஏற்று, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள 29 ஆயிரத்து 387 ஏக்கர் பழைய பாசனப் பகுதிகளுக்கும் மற்றும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள 25 ஆயிரத்து 250 ஏக்கர் புதிய பாசனப்பகுதிகளுக்கும் வரும் 3ம்தேதி முதல் 31ம் தேதி வரை , தகுந்த இடைவெளி விட்டு, நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தினைப் பொறுத்து அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட ஆணையிட்டு இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

