டெங்கு, பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தாய்-சேய் நலம் மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக டெல்லியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் தமிழக சுகாதாரத்துறைக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. சுகாதாரம், குடிநீர், மருத்துவ செயல்பாடு உள்ளிட்ட 34 அளவீடுகளை கொண்டு கணக்கிட்டதில் இந்திய அளவில் நாகை மாவட்டம் சிறந்த மாவட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, நிதி ஆயோக் துணைத்தலைவர் கையால் நாகை ஆட்சியர் விருது பெற்றார்.
இந்த இரு விருதுகளையும், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் காண்பித்து வாழ்த்து பெற்ற பின், சுகாதாரத்துறை அமைச்சரும் முதன்மைச் செயலாளரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, இரண்டு விருதுகள் சேர்த்து 19 விருதுகளை மக்கள் நல்வாழ்வு துறை பெற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

