கேரளாவில் வேகமாகப் பரவிவரும் எலிக் காய்ச்சல், தமிழகத்தில் பரவாமல் இருக்க நெல்லை மாவட்ட எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக அனைத்து மாவட்டங்களும் தண்ணீரில் மூழ்கின. தற்போது தண்ணீர் வடிந்து மக்கள் இயல்புநிலைக்குத் திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் கேரளாவில் தற்போது எலிக்காய்ச்சல் பரவிவருகிறது.கோழிக்கோடு மாவட்டத்தில் முதலில் தொடங்கிய எலிக் காய்ச்சல் திருச்சூர், பாலக்காடு, மலப்புறம், கண்ணூர் மாவட்டங்களில் பரவியது. எலி காய்ச்சல் காரணமாக நேற்று ஒருநாள் மட்டும் 10 பேர் இறந்துள்ளனர்.
இதனிடையே கேரளாவைத் தொடர்ந்து தமிழக பகுதிகளில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் நிலவிவருகிறது. இதனால், தமிழக-கேரள எல்லையான நெல்லை மாவட்டத்தில் உள்ள புளியரை சோதனைச்சாவடியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

