தமது ஆதரவாளர்கள் யாரும் அமைச்சர்கள் பேனரை கிழிக்கவில்லை என்று டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார். தனது தொண்டர்கள் மீது பொய் வழக்கு போடுவதாக டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார். தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கடந்த 30-ம் தேதி பசும்பொன்னில் இருக்கும் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். அவர்களை வரவேற்று அதிமுகவினர் ஏராளமான பேனர்களை வைத்தனர்.
ஆனால் அந்த பேனர்கள் சிலரால் கிழிக்கப்பட்டது. பேனர்களை கிழித்தது அமமுகவினர்தான் என அதிமுக தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து டிடிவி தினகரன் உள்ளிட்ட அமமுகவினர் 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் தங்கள் மீது பொய் வழக்கு போட்டால் நீதிமன்றம் செல்வோம் என்று டிடிவி தெரிவித்தார்.
அமைச்சர்களின் பேனர்களை கிழித்து பொதுமக்கள் தங்களது கோபத்தை வெளிபடுத்தியுள்ளதாகவும், கடந்த ஆண்டும் இதே போல பேனர்கள் கிழிக்கப்பட்டதாகவும் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார். மாவட்ட எஸ்.பி. கேட்டுக்கொண்டதால் பேனர்களை கிழிக்க வேண்டாம் என் அங்கிருந்தவர்களிடம் கேட்டுக் கொண்டதாக விளக்கம் அளித்தார்.

