தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 18 பேரும், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக, டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் கூறியிருக்கிறார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களை சந்தித்து, மதுரையில் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன் உள்ளிட்ட அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களும், வழக்கறிஞர்களும் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தங்கத்தமிழ்ச்செல்வன், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். மேல்முறையீடு விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும்போது, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டாலும், அதனையும் எதிர்கொள்ள தயார் என்றும் தங்கத்தமிழ்ச்செல்வன் கூறினார்.

