தமிழக பள்ளிக்கல்வித்துறையில் சிறப்பு ஆசிரியர் தேர்வுக்காக வெளியிடப்பட்டுள்ள இறுதி பெயர் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக பள்ளி கல்வித்துறையில் உடற்கல்வி, தையல், இசை, ஓவியம் ஆகிய ஆசிரியர் காலிப்பணியிடங்கள் சிறப்பு ஆசிரியர் தேர்வால் நிரப்பப்படுவது வழக்கம்.
அந்தவகையில் 1325 சிறப்பு ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்களுக்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்தியது. இதில் 35 ஆயிரம் பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதில் மொத்தம் 2650 பேர் ஆகஸ்ட் மாதம் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களில் 1080 பேர் தேர்வானதாக அக்டோபர் மாதம் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில் 172 பேரின் பெயர் வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
இறுதி பட்டியல் வெளியிட்ட பின்னரும் இன்னும் அவர்களுக்கு பணி ஆணை வழங்கவில்லை. இந்த நிலையில் சிறப்பு ஆசிரியர் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 172 பேரின் பெயர்கள் அறிவிக்கப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருப்பது ஏன் என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், இறுதி பட்டியலில் சேர்ப்பதற்காக சிலரின் சாதி முறைகேடாக குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

