திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில், வீடு புகுந்து திருட முயன்ற கொள்ளையனை கையும் களவுமாக பிடித்த மக்கள் அவனை சரமாரியாக தாக்கினர்.
வத்தலகுண்டு வெங்கட்டாபட்டி தெருவைச் சேர்ந்த மின்வாரிய ஊழியரான காசிராஜனின் வீட்டுக்குள் திடிரென ஒருவர் நுழைந்து, பொருட்களை திருட முயற்சித்துள்ளார். அப்போது, அங்கு வந்த காசிராஜனின் மனைவி சிவகாமி வீடு திறந்து கிடப்பதை கண்டு கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் அவரை கிராம மக்கள் ஊரின் நடுவே உள்ள கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாகத் தாக்கினர். அதன்பின் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வத்தலகுண்டு போலீசார், நடந்த விவரம் முழுவதையும் விசாரித்து விட்டு திருட வந்த அந்த நபரை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர். அதன்பின் அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தீவிர விசாரணைக்கு பின் அந்த திருடனிடம் இருந்து 5 சவரன் தங்கச்சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது.

