கிழக்காசிய கடல் பகுதியில் அமைதியை நிலை நிறுத்த, ஆசியான் நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பத்து நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ள இந்திய – ஏசியான் மாநாடு டெல்லியில் தொடங்கியது. தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், கம்போடியா, லாவோஸ் மற்றும் புருனே ஆகிய கிழக்காசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்களும் இதில் பங்கேற்றுள்ளனர். இந்திய – ஏசியன் மாநாட்டின் தொடக்க நிகழ்வாக நினைவு தபால் தலை வெளியிடப்பட்டது. பின்னர் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஏசியன் நாடுகளின் தலைவர்களின் வருகை அனைத்து இந்தியர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருப்பதாக கூறினார். கிழக்காசிய நாடுகளுக்கான இந்தியாவின் கொள்கை அடிப்படையில் இந்த மாநாடு நடைபெறுவதாகவும், அதன்படி அமைதி, வளம், வளர்ச்சி ஆகியவற்றை பகிர்ந்து கொள்வதற்கான ஐந்தாண்டு வேலைத்திட்டம் இதன் மூலம் வெற்றியடையும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

