ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வுபெறும் நிலையில் அவருக்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் சிறப்பு மரியாதை தரும் நிகழ்ச்சியை நடத்தினர்.
தமிழக ரயில்வே காவல்துறை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவையும் கவனித்து வருகிறார். வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் பதுக்கப்பட்ட தமிழக சிற்பங்களையும், களவாடப்பட்ட கோவில் சிலைகளையும் அவர் மீட்டெடுத்து கோவில்களிலேயே மீண்டும் கொண்டு சேர்த்தார்.
பணிக்காலம் முடிவடைவதை அடுத்து இன்றுடன் அவர் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், ரயில்வே பாதுகாப்பு படையினர், ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு சிறப்பு மரியாதை தரும் நிகழ்ச்சியை நேற்று பெரம்பூரில் நடத்தினர். அப்போது ரயில்வே பாதுகாப்பு படையில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பொன்மாணிக்கவேல் வெகுமதி அளித்து பாராட்டினார்.
15 ஆண்டுகளுக்கு முன் நடந்த வழக்கு ஒன்றையும், அப்போது அவர் அதைக் கையாண்ட விதம் குறித்தும் ரயில்வே பாதுகாப்புப் படைக் காவலர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
இறுதியாக தாமும் தங்களைப் போல் ஒரு காவலர்தான் என்பதால், புகழ்ந்து பேசி புல்லரிக்கச் செய்ய வேண்டாம் எனவும் பொன். மாணிக்கவேல் நகைச்சுவை ததும்ப கேட்டுக் கொண்டார்.

