ஈரான் கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்…

ஈரான் கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேரந்த 15 மீனவர்கள் ஈரான் கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த மீனவர்கள் ஈரானில் உள்ள கீஸ் தீவில் தங்களின் படகுகளிலேயே கடந்த இரண்டு மாதமாகச் சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு ஈரானிய நீதிமன்றம் அபராதம் விதித்திருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அந்த மீனவர்களில் கன்னியாகுமரியைச் சேர்ந்த வினிஸ்டன் சர்க்கரை நோயாளி என்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கிரோஸ்டின் இருதயக் கோளாறு உடையவர் என்றும் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தங்களின் பிழைப்புக்காக வெளிநாட்டிற்குச் சென்ற அந்த ஏழை மீனவர்கள் நீண்டகாலமாக சிறைவைக்கப்பட்டிருப்பது இந்தியாவிலுள்ள அவர்களின் குடும்பத்தினரைக் கடுமையாகப் பாதிக்கும் என கூறியுள்ளார். எனவே தெஹ்ரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தூதர்கள் மூலமாக பிரதமர் நேரடியாக தலையிட்டு அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளையும் அவர்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனக் முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *