தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் போது, எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே, நேற்று மீன்பிடிக்க சென்ற 13 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களின் இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், இதுக்குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்கள் உள்பட இலங்கை சிறைகளில் உள்ள 84 மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான 159 மீன்பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2018-01-05

