இந்தோனேசியாவில் கடலில் விழுந்த விமானத்தில் சென்ற 189 பேரில் ஒருவர் கூட உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். விமானத்தை ஓட்டிச் சென்ற இந்திய விமானியும் இந்த விபத்தில் பலியானார்.
இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து நேற்று காலை பயணிகள், விமானக் குழுவினர் என 189 பேருடன் பன்க்கல் பினாங் தீவுக்கு லயன் ஏர் விமானம் புறப்பட்டது.விமானம் புறப்பட்ட 13வது நிமிடத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்டு ராடார் கண்காணிப்பில் இருந்து விமானம் மாயமாகியது.
இதனைத் தொடர்ந்து விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதி செய்தனர். உடனடியாக மீட்பு மற்றும் தேடுதல் குழுக்கள் ஜகார்த்தாவை சுற்றிய கடலில் பயணிகளைத் தேடி வந்தன. ஆறு பேரின் உயிரற்ற உடல்களும் உடைமைகளும் விமானத்தின் சில பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விபத்து நடந்து பல மணி நேரமாகி விட்ட நிலையில், விமானத்தில் பயணித்த மூன்று குழந்தைகள் உள்பட 189 பேரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானத்தை ஓட்டிச் சென்ற டெல்லியைச் சேர்ந்த இந்திய இளைஞர் உயிரிழந்ததாக இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. தன்ஜங் துறைமுகத்தில் கரை ஒதுங்கிய பொருட்களை வைத்து விமானத்தின் இதர பகுதிகளையும் பயணிகளையும் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
கடலில் மிகப்பெரிய அலைகள் இடையே நீருக்கடியில் தேடும் ரோபோக்களைப் பயன்படுத்தி உடல்களைத் தேடி வருகின்றனர். விமானத்தின் கருப்புப் பெட்டி கிடைத்தால் விபத்துக்கான காரணம் புரிய வரும் என்பதால் அதனையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். லயன் நிறுவனத்திற்கு சொந்தமான புத்தம் புதிய விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்று குழப்பம் நீடிக்கிறது.

