படேலுக்கு பிரமாண்ட சிலை அமைத்தது தேச தந்தையை அவமதிக்கும் செயல்: திருமாவளவன் குற்றச்சாட்டு

படேலுக்கு பிரமாண்ட சிலை அமைத்தது, தேச தந்தை மகாத்மா காந்தியை அவமதிக்கும் செயல் என்று, திருமாவளவன் குற்றச்சாட்டி உள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் டிச.10ம் தேதி திருச்சியில் தேசம் காப்போம் மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் ஆயத்த மாநாடு நடந்து வருகிறது. அதன்படி, ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம் காஞ்சிபுரத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் கலைவடிவன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் தமிழரசன், ஆதவன், ராஜ்குமார், தேவ அருள்பிரகாசம், திருமாதாசன், செந்தமிழன், மதிஆதவன்  முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் வல்லரசு, புத்தேரி ஸ்டான்லி வரவேற்றனர். கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் மாநில துணை பொதுச் செயலாளர் பாலாஜி, மண்டல செயலாளர் விடுதலை செழியன், வழக்கறிஞர் அணி பார்வேந்தன் மற்றும் பொதினி வளவன், பாசறை செல்வராசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்கு பின்னர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: ஆபத்தான கட்சியா பாஜக என்று நிருபர்கள் கேட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த், எதிர்க்கட்சிகள் எல்லோரும் சொல்கிறார்கள், அப்படி என்றால் அப்படித்தான் இருக்க முடியும் என்று கூறியுள்ளார். பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். அதற்காக படை பலவீனமானதும் அல்ல, பாம்பு பலமானதும் அல்ல. சனாதன தர்ம கொள்கைகளை கொண்ட பாஜக ஆபத்தானதுதான். பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் இறைச்சிக்கு தடை விதித்துள்ளது சட்டத்துக்கு எதிரானது, விரோதமானது. மகாத்மா காந்திதான் தேசத் தந்தை என்று அழைக்கப்பட்டு வருபவர். இதனை சீர்குலைக்கும் விதமாக, காந்தியை அவமதிக்கும் நோக்கில் பிரமாண்டமாக படேல் சிலையை உள்நோக்கத்துடன் பாஜக அரசு வைத்துள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *